பாதுகாப்பற்ற வாழ்க்கை: ஆஸியிலிருந்து வெளியேறும் மாணவர்கள்
புதுதில்லி, பிப்.8 ஆஸ்திரேலியாவில் தொடர் தாக்குதல்
காரணமாகவும், வேலைவாய்ப்பின்மையாலும் இந்திய மாணவர்கள் பலர், அங்கிருந்து
வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மாணவர்கள் மீது
ஆஸ்திரேலியாவில் தாக்குதல்கள் நடத்தப்படுவது தொடர் கதையாக அரங்கேறி
வருகிறது. இதற்கு இனவெறிதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை
ஆஸ்திரேலிய அரசு மறுத்துள்ளது.
இந்த நிலையில் தொடர் தாக்குதல்
காரணமாக நிலவும் பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழல்களுக்கு அஞ்சி, இந்திய
மாணவர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆஸ்திரேலியாவில்
உள்ள இந்திய மாணவர்கள் சம்மேளன செயலாளர் கவுதம் குப்தா இது பற்றி
கூறுகையில், தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 1,50,000 இந்திய மாணவர்கள்
உள்ளனர். இவர்களில் பலர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
ஆயினும்
இது பற்றிய புள்ளி விவரங்கள் ஏதுமில்லை. பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழலும்
வேலைக்கு உத்தரவாதமின்மையுமே இதற்கு காரணம் என்று தெரிவித்தார். 2009
ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தம்பதியினர் ஆஸ்திரேலியா வந்தனர். அதில் கணவர்
மீது மெல்பர்ன் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள்
ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
இப்படி அடி வாங்குவதற்கா
இந்தியர்கள் இங்கு வந்தனர். இந்தியர்கள் என்ன தவறு செய்தார்கள் என்றும்
குப்தா கூறினார். இதே போல 26 வயதான செஜால் ஷா என்ற மாணவியும் பல்வேறு
கனவுகளுடன் 2008 ஆம் ஆண்டு மெல்பர்ன் நகரம் சென்றுள்ளார்.
ஆனால்
அங்கு நடந்து வரும் அசம்பாவிதங்களால் அச்சமடைந்து பட்டப்படிப்பு
முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே 2009 நவம்பர் மாதம் அவர் தாயகம்
திரும்பி விட்டார். மேலும் வேலை உத்தரவாத மின்மையும் இந்திய மாணவர்களை
அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது. தற்போது கல்வி முடித்த 150 மாணவர்களில் 5
பேருக்குத்தான் வேலை கிடைத்துள்ளது என்று மெல்பர்ன் பல்கலைக்கழக வர்த்தக
மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.
இவ்வாறு ஆஸ்திரேலியாவில் நிலவி வரும்
பாதுகாப்பற்ற சூழல், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளால் அங்குள்ள
இந்திய மாணவர்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
|