புதுதில்லி, மார்ச்.9 நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்களவை
மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும்
அரசியல் சட்ட திருத்த மசோதா நேற்று (மார்ச்.8) தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த மசோதாவை விவாதத்துக்கே எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு
அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி
கட்சி உறுப்பினர்கள், லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதள உறுப்பினர்கள்
இந்த மசோதாவை மிகவும் ஆக்ரோஷமாக எதிர்த்தனர்.
அவைத் தலைவர் ஹமீத்
அன்சாரியை தாக்குவதைப் போல் அவரது இருக்கையை நோக்கி பாய்ந்ததோடு,
இருக்கைக்கு முன் இருக்கும் மைக்கை பிடுங்கி அவர்கள் எறிந்தனர். இதனால்
அவையில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது
இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த
25 உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் அவையே ஸ்தம்பித்தது. கடும் அமளி
காரணமாக அவை 5 முறை ஒத்திவைக்கப்பட்டது. மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக்
கொள்ள அவர்கள் இறுதி வரை அனுமதிக்கவில்லை. இதனால் மசோதா மீதான விவாதம்
மற்றும் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாஜக போர்க்கொடி
"இந்த
மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு போதிய அக்கறை செலுத்தாதே அவையில் அமளி ஏற்பட
காரணம். முன்கூட்டியே இது குறித்து ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை
எடுத்திருக்கலாம்' என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேலும்
"அரசியல் சட்டத் திருத்த மசோதாவை விவாதம் இல்லாமல் நிறைவேற்றக் கூடாது'
என்றும் பாஜக போர்க்கொடி தூக்கி உள்ளது.
சமாஜ்வாதி மற்றும்
ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருப்பதால்
மசோதா நிறைவேறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ்,
பாஜக, இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத
காங்கிரஸ், அகாலி தளம், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட
கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன.
சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
பிரதான
கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் விவாதத்துக்குப் பின் நடைபெறும்
வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுவது உறுதி என்று கருதப்பட்டது. ஆனால்
முலாயம்,லாலு கட்சியின் 25 உறுப்பினர்கள் அவையை முடக்கிவிட்டனர்.
திங்கள்கிழமை
அவை தொடங்கிய உடன் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி
மசோதாவை தாக்கல் செய்தார். அப்போதே லாலு, முலாயம் கட்சியினர் அமளியையும்
தொடங்கிவிட்டனர்.
இதனால் அவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக அவை பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, தலைவரின் இருக்கையை
முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். லாலு கட்சியை சேர்ந்த ராஜ்நிதி பிரசாத்
மற்றும் முலாயம்சிங் கட்சியை சேர்ந்த கமல் அக்தர், நந்த கிஷோர் ஆகியோர்
பத்திரிகையாளர்கள் மேஜை மீது ஏறிச்சென்று மாநிலங்களவை தலைவரின் மேஜையில்
இருந்த மசோதா நகல்களை பிடித்து இழுத்தனர்.
அவையின் மையப்பகுதியில்
இருந்த கோப்புகள் தூக்கி வீசப்பட்டன. மேலும், மகளிர் இட ஒதுக்கீடு சட்ட
திருத்த மசோதா நகல்களை கிழித்து எறிந்தனர். மாநிலங்களவை தலைவரான துணை
ஜனாதிபதி ஹமீது அன்சாரியை நோக்கி காகிதங்கள் பறந்தன. அவருக்கு முன்பு
இருந்த `மைக்'கையும் எம்.பி.க்கள் பிடித்து இழுத்து உடைத்தனர். உடனே, சபை
காவலர்கள் விரைந்து வந்து, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீது காகிதங்கள்
விழாமல் தடுத்தனர். `மைக்'கையும் கீழே விழாமல் பிடித்தனர். மேலும் சில
உறுப்பினர்கள் அன்சாரியின் இருக்கையை நோக்கி பாய்ந்தனர். நிலைமையின்
விபரீதத்தை உணர்ந்த அவைக் காவலர்கள் அன்சாரிக்கு அரணாக நின்று பாதுகாப்பு
அளித்தனர். உறுப்பினர்கள் அன்சாரியின் மேடையை நோக்கி முன்னேறுவதையும்
தடுத்தனர்.
அன்சாரியின் மேடை அருகே உள்ள மாநிலங்களவை நிருபர்கள்
மேடையில் ஏறி நின்று மசோதாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார் அக்தர்.
பின்னர் அவரும் ராஜ்நீதி பிரசாரத்தும் மசோதா நகலை கிழித்து அன்சாரியை
நோக்கி வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவைத் தலைவர் அன்சாரி
அவையை 3 மணி வரை ஒத்தி வைத்தார்.
நாடாளுமன்றத்தில் அமளி
மாநிலங்களவை போலவே,
நாடாளுமன்றத்திலும் நேற்று அமளி ஏற்பட்டது. பாராளுமன்றம் கூடியதும்
குரேஷியா நாட்டு குழுவினரை சபாநாயகர் மீராகுமார் வரவேற்றார்.
பின்னர்,
மகளிர் தின வாழ்த்துச்செய்தியை வாசித்தார். பின்னர், கேள்வி நேரம்
தொடங்கியதும், `மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்டடீர்,
தலித், முஸ்லிம் பெண்களுக்கும் உள் இடஒதுக்கீடு தேவை என சமாஜ்வாடி,
ராஷ்டிரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
கேள்வி
நேரத்தை ஒத்திவைக்க மீராகுமார் மறுத்ததால் முலாயம்சிங் தலைமையில்
சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள், அவையின் மையப்பகுதியை நோக்கி சென்றனர்.
அவர்களுக்கு பின்னால் லாலு பிரசாத் தலைமையில் ராஷ்டிரீய ஜனதாதளம்
எம்.பி.க்களும், உமாசங்கர் சிங் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி
எம்.பி.க்களும் சென்றனர். சபாநாயகர் இருக்கை அமைந்துள்ள பீடத்தை சுற்றி
நின்று கோஷம் எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் சபாநாயகர் பீடத்தின்
மீது சமாஜ்வாடி கட்சியைச்சேர்ந்த மிதிலேஷ் குமார் என்ற எம்.பி.,
ஏறத்தொடங்கினார். உடனே, அவை முன்னவரும், நிதி மந்திரியுமான பிரணாப்
முகர்ஜி எழுந்து, `உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்துங்கள்' என சமாஜ்வாடி
தலைவர் முலாயம்சிங்கை எச்சரித்தார். அமளி தொடர்ந்ததால், நண்பகல் 12 மணி
வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் சபை கூடியதும்
அமளி நீடித்தது. கேள்வி நேரம் முடிந்ததும் பிரச்சினையை எழுப்புமாறு
சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை அவர்கள் கேட்கவில்லை. அவையின்
மையப்பகுதிக்கு வந்து 15 நிமிடங்களுக்கு மேல் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பிரணாப் முகர்ஜி, அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய
தலைவர்களும் அவையில் இருந்தனர்.
அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி,
3 மணி, மாலை 4 மணி, மாலை 6 மணி என அடுத்தடுத்து பாராளுமன்றம்
ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர்
பாராளுமன்றத்துக்கு வெளியே பேட்டியளித்த சபாநாயகர் மீராகுமார், `சமாஜ்வாடி
மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம்' எம்.பி.க்களின் ஒழுங்கீன நடவடிக்கைக்கு
கண்டனம் தெரிவித்தார்.