ருச்சிகா வழக்கு விவகாரம்: ரத்தோருக்கு கத்தி குத்து
சண்டீகர், பிப்.8 பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான இளம்
டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா தற்கொலை செய்து கொண்ட வழக்கில்
குற்றம்சாட்டப்பட்ட ஹரியாணா மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர்
எஸ்.பி.எஸ். ரத்தோரை, சண்டிகர் நீதிமன்றவளாகத்தில் பகுதிநேர
பத்திரிக்கையாளர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
பன்ச்குலாவில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இன்று
(பிப்.8) ருச்சிகா வழக்கு தொடர்பான ரகசிய விசாரணை நடைபெற்றது. இதற்காக
ரத்தோர் தனது வக்கீலும், மனைவியுமான அபாவுடன் வந்திருந்தார்.
வழக்கை
முடித்து விட்டு அவர் வெளியே வந்தபோது திடீரென ஒருவர் பாய்ந்து வந்தார்.
தனது கையில் வைத்திருந்த கத்தியால் ரத்தோரை குத்தினார். இதில்,
ரத்தோருக்கு ரத்தம் வழிந்தது. இந்நிலையில், உடன் வந்த போலீஸார் அந்த நபரை
பிடிப்பதற்குள் அவர் ரத்தோரின் முகத்தில் இருமுறை கைகளால் குத்தினார்.
இதனால் ரத்தம் வழிந்ததை கைக்குட்டையால் மூடியபடி ரத்தோர் தனது காரில் ஏறி
புறப்பட்டுச் சென்றார்.
அவரைக் கத்தியால் குத்திய உத்சவ் சர்மா
என்னும் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவர் உத்தரப் பிரதேச மாநிலம்
வாரணாசியைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஆமதாபாத்தில் திரைப்படத் தயாரிப்பு
தொடர்பாக படித்து வருகிறார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு
உள்ளான முன்னாள் டிஜிபி ரத்தோர் உடனடியாக செக்டர் 16ல் உள்ள அரசு
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது.
1990ல் இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவை (15)
பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும்
முன்னாள் டிஜிபி ரத்தோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
19
ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கில் ரத்தோருக்கு 6 மாத சிறைத்
தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும், அவர்
உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவ்வழக்கு தொடர்பாக
இன்று நீதிமன்றம் வந்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.
ரத்தோரை
கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளர். அவர் அகமதாபாத்தைச்
சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பகுதி நேர பத்திரிக்கையாளராக அவர்
செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது
|