ரயில் பாதையில் நாசவேலை:சரக்கு ரயில் தடம் புரண்டது
புவனேஸ்வர், பிப்.8 மும்பை-ஹௌரா இடையேயான ரயில்பாதையின் ஒரு
பகுதி வெடிவைத்துத் தகர்க்கப்பட்டதால், அந்த வழியாகச் சென்ற ஒரு சரக்கு
ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இது மாவோயிஸ்டுகளின் சதிவேலையாக
இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
ரூர்கேலாவில் இருந்து 30
கி.மீ. தொலைவில் பாலுலத்தா மற்றும் ஜரேகேலா ஆகிய பகுதிகளுக்கு இடையே
இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. தண்டவாளம் தகர்க்கப்பட்டதால், அந்த
வழியாகச் சென்ற ஒரு சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இந்தச்
சம்பவத்தில் சேதம் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை.
இந்தச் சம்பவத்தையடுத்து, ஹௌரா - மும்பை இடையே செல்லும் பல ரயில்கள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
மாவோயிஸ்ட்களை
ஒடுக்குவதற்காக, அவர்களால் பாதிக்கப்பட்ட பீகார், ஜார்க்கண்ட், மேற்கு
வங்கம், ஒரிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில், 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்'
என்ற நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து,
இம்மாநிலங்களில் 72 மணி நேர 'பந்த்'துக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு
விடுத்திருந்தனர்.
தொடர்ந்து இரண்டாம் நாள் பந்த்தில் ஒரிசா மாநிலம் சந்தர்கர்க் நகர் அருகே ரயில் தண்டவாளங்களை மாவோயிஸ்ட்கள் வெடிவைத்து தகர்த்தனர்.
இதனால்
ஹவுரா-மும்பை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பீகார்
மாநிலம் மங்கூர் நகரிலும் ரயில் தண்டவாளங்களை தகர்க்கப்பட்டுள்ளது. இதனால்
அங்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
|