டீசல் விலை குறைக்கப்படும் - முதல்வர் நம்பிக்கை
திருச்சி, மார்ச்.3 டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் என்று முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 
குடிசை
வீடுகளுக்கு பதிலாக இலவச கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொக்கும் திட்டத்தை
தொடங்கி வைக்க இன்று (மார்ச்.3) திருச்சி சென்ற முதலமைச்சர் கருணாநிதி
அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டி விவரம் வருமாறு:
கே:
ஒரு நல்ல ஆட்சி செய்ய வேண்டிய உணவு, உடை, உறை விடம் என்ற மூன்றையுமே
கொடுத்து விட்டீர்கள். இலவச விவசாய நிலத்தைக் கூட அளித்திருக்கிறீர்கள்.
இந்த சூழ்நிலையில் வரவிருக்கின்ற நிதி நிலையில் வேறு ஏதாவது
வழங்கவிருக்கிறீர்களா?
முதல்வர்: 19-ம் தேதி காலையிலே தெரிந்து விடும். 19-ம் தேதி மாலை மற்றும் 20-ம் தேதி காலை ஏடுகளிலே விரிவாகத் தெரியும்.
கே:
விலைவாசியைக் குறைப்ப தற்காக மத்திய அரசு உங்களையும் இணைத்து ஒரு குழுவினை
நியமித்துள்ளது. மூத்த முதலமைச்சர், அரசியல் வாதி என்ற முறையில் அந்தக்
குழுவிற்கு நீங்கள் ஏதாவது யோசனை தெரிவித்திருக்கிறீர்களா?
முதல்வர்: இனி மேல் தான் கொடுப்பேன்.
கே:
பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் எல்லாம் வெளி
நடப்பு செய்தார்கள். நீங்களும் இதே பிரச்சனைக்காக கடிதம்
எழுதியிருக்கிறீர்கள். இன்று டெல்லியில் நடைபெறுகின்ற எதிர்க்கட்சிகளின்
ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வீர்களா? இது பற்றி உங்கள் கருத்து
என்ன?
முதல்வர்: இதை பற்றி மத்திய அரசு தனது நிலையை
விளக்கியிருக்கிறது. பிரதமர் என்னிடத்திலே தொலைபேசியிலே தொடர்பு கொண்டு
பேசினார். அவரும் நிதியமைச்சர் பிரணாப்பும் மற்றுமுள்ள மத்திய
அமைச்சர்களும் என்னிடத்திலே பேசியதில் உள்ள மொத்த கருத்தை உங்களுக்கு
விவரிக்க விரும்புகிறேன்.
மத்திய அரசின் வருவாய் 2010-2011-ம்
ஆண்டுக்கு சுமார் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். இதில் வரி வருவாய் ஏழரை
லட்சம் கோடி ரூபாய்; வரி அல்லாத வருவாய் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். நிதி
பற்றாக்குறை இந்தியாவின் மொத்த வருவாயில் ஜிடிபி-ல் 5.5 சதவிகிதம். இந்தப்
பற்றாக்குறையை சரிக்கட்ட வேண்டும் என்றால் 3.8 லட்சம் கோடி ரூபாய் கடன்
வாங்க வேண்டியிருக்கிறது.
இப்படி கடன் வாங்குவதை ஓரளவாவது
குறைப்பதற்காகத் தான் இப்படி வரி போடப்படுகிறது. பெட்ரோலிய பொருள்களின்
விலையை உயர்த்தப் படுகிறது என்ற விளக்கத்தை மத்திய அரசு சார்பில்
சொல்கிறார்கள்.மத்திய நிதிக்குழு, நிதிப் பற்றாக்குறை என்பது 3
சதவிகிதத்திற்குள் தான் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறது.
அதிலும்
2014-15-க்குள் ஒரு சதவிகித அளவிற்குக் கூட இருக்கக் கூடாது என்றும்
வருவாய் உபரியாக இருக்க வேண்டுமென்றும் சொல்லியி ருக்கிறது. ஆனால் தற்போது
நிதி பற்றாக்குறை 5.5 சதவிகிதம் என்று இருப்பதால் வருகின்ற காலத்தில்
அதைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு உள்ளது.
பற்றாக்குறையைச்
சரிக்கட்ட வங்கிகளிடம் கடன் வாங்குவது என்ற ஒரு முறை இருந்தாலும்
கூட, பிறகு வங்கிகள் மற்ற தொழில் நிறுவனங்களுக்கும், ஏனையோருக்கும் கடன்
கொடுக்க முடியாத சூழ்நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டு விடும். எனவே தான்
பற்றாக்குறையை சரிக்கட்ட மத்திய அரசுக்கு வரி போட வேண்டிய பெட்ரோல் விலையை
உயர்த்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதில் நேரடியாக
விவசாயிகளையும் உணவு உற்பத்தியையும் பாதிக்கக் கூடிய நிலையிலே டீசல்
உயர்வு இருப்பதால் அதையாவது ரத்து செய்ய வேண்டுமென்று தான் நான் கடிதம்
மூலமாகக் கேட்டேன். நம்முடைய நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களும்,
நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் இதைத் தான் வலியுறுத்தி
யிருக்கிறார்கள்.
இன்று நடைபெறுகின்ற எதிர்க்கட்சிகளின்
ஆர்ப்பாட்டத்தில் திமுக கலந்து கொள்ளுமா என்று கேட்டீர்கள். எங்களைப்
பொறுத்த வரையில் அண்ணா கற்றுக் தந்துள்ள வழியில் நாடாளுமன்றம் ஆனாலும்,
சட்டமன்றம் ஆனாலும் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை மக்களைப் பாதிக்கக்
செய்யும் பிரச்சனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற
வலியுறுத்தல்களை கருத்து வடிவத்தில், விவாத வடிவத்தில் எடுத்து வைத்து
தீர்வு காணவேண்டும் என்று விரும்புவோமே தவிர, அதற்காக எந்த மன்றம் ஆனாலும்
அந்த மன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போகின்ற அளவிற்கு நடந்து கொள்வதை
விரும்புவதில்லை. அதனால் வாக்களித்த பொது மக்களுக்கும் வாக்காளர்களுக்கும்
தான் பாதிக்கப்படுவார்கள்.
கே: தொடர்ந்து டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென்று வலியுறுத்துவீர்களா? முதல்வர்: விவாத வடிவில் வலியுறுத்துவோம்.
கே: விவாத அடிப்படையில் மத்திய அரசு டீசல் விலையைக் குறைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா? முதல்வர்: நம்பிகிறோம்.
கே:
சேது சமுத்திரத் திட்டம் முடங்கிப் போய்க் கிடக்கிறதே? மத்திய அரசின்
நிதிநிலை அறிக்கையிலே இந்த ஆண்டு நிதியும் ஒதுக்கவில்லை. அந்தத் திட்டம்
முடக்கப்பட்டு விட்டதா?
ப: முடக்கப்பட்டு விட்டதாகச் சொல்ல
முடியாது. தொய்வு அடைந்துள்ளது என்பது உண்மை. ஏற்கனவே சேது
திட்டத்திற்காக பணம் ஒதுக்கியிருக்கிறார்கள். 2472 கோடி ரூபாய்
ஒதுக்கியிருக்கிறார்கள். இப்போது திட்டமே உண்டா இல்லையா என்பது
நீதிமன்றத்தின் முன்னால் கேள்விக்குறியாக இருக்கிறது. மாற்றுப் பாதை பற்றி
கேள்வி கேட்கப்பட்டது. மாற்றுப் பாதைக்கு இடமே இல்லை.என்றாலும் முதலில்
ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட பாதையே மிகச் சரியான பாதையாகும்.
|