மார்ச் 15 மாநகராட்சி பட்ஜெட் - மேயர்
சென்னை, பிப்.8 சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை மார்ச்
மாதம் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் அரிமா சங்கம் 15 லட்சம்
ரூபாய் செலவில் அமைத்து கொடுத்துள்ள 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட
குடிநீர் தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மேயர்
மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு இந்த புதிய குடிநீர் தொட்டியை திறந்து
வைத்தார். துணை மேயர் சத்யபாமா, கமிஷனர் ராஜேஷ் லக்கானி, எதிர்க்கட்சி
தலைவர் சைதை ரவி மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட
பலர் இதில் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் மேயர் சுப்பிரமணியன்
பேசுகையில், உலகின் 2ஆவது மிகப்பெரிய கடற்கரை மெரினா கடற்கரை. இதனை
அழகுபடுத்த முதலமைச்சர் கருணாநிதி மற்றும் துணை முதலமைச்சர் ஸ்டாலின்
பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க இக்கடற்கரை ரூ.21 கோடி செலவில்
அழகுபடுத்தப்பட்டு எழிலுடன் காட்சி அளிக்கிறது.30 இடங்களில்
அமரும் மேடைகளும், நீரூற்றுகளும் அமைக்கப்பட் டுள்ளன. மெரீனாவுக்கு
தினமும் சுமார் 40 ஆயிரம் பேர் வருகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த
எண்ணிக்கை 1 லட்சம் வரை அதிகரிக்கிறது. இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தவும்
தடை விதிக்கப்பட்டுள்ளது.மெரினாவில் பொதுமக்களுக்கு
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை நிறைவேற்றி வைக்கும் வகையில் இந்த புதிய குடிநீர் தொட்டியை அரிமா
சங்கம் அமைத்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.மெரினாவில் 3
இடங்களில் நவீன கழிப்பிடங்களும் கட்டப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியின்
நிதி நிலை அறிக்கை வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி மாமன்றத்தில் தாக்கல்
செய்யப்படும். 17ஆம் தேதி அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்
படும். கல்வி, சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம்
அளிக்கப்படும் என்றார் மேயர்.
|